நவராத்திரி பிரம்மோற்சவம்: அனுமன், யானை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

அனுமன் வாகன வீதிஉலா.இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
நவராத்திரி பிரம்மோற்சவம்: அனுமன், யானை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் மலையப்பசாமி வீதிஉலா வந்தார்.

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை ராமவதாரத்தை விளக்கும் வகையில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'கோதண்டராமர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கலைக் குழுவை சேர்ந்தவர்கள் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜீயர் சுவாமிகள் வேத மந்திரங்களை ஓதினார். பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.

அதைத்தொடர்ந்து கஜேந்திர மோட்சத்தை விளக்கும் வகையில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com