ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் கோலாகலம்

குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் கோலாகலம்
Published on

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலத்துடன் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி தொடங்கிய பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியட்டாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல் வெளிக்கு வந்த நம்பெருமாள்

மாலை 6 மணிவரை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இன்று (31-ந்தேதி) அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக்கொள்ளையனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்டது.

இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார்.

வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்படாள் வாசல்வழியே மணல்வெளிக்கு வந்துவிடு வதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை.

10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com