கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும் முறைகள்

ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும் முறைகள்
Published on

ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும்.

பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றில் இருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல் களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள். முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.

பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com