பூஜை செய்யும் முறை

ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.
பூஜை செய்யும் முறை
Published on

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாக செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவே தனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர். ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!

கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலு மிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்!

அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com