மாசி மகம்: வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
மாசி மகம்: வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது. பிரசித்திபெற்ற திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். பாரம்பரிய இசைக்கருவிகளான தாரை, தப்பு உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெற்றது.

இதில் வேதாரண்யம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா.. மறைகாடா.. என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் அசைந்தாடியபடி சென்று, நிலையை வந்தடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com