வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வழிபாடு

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற காட்சி
தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற காட்சி
Published on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. அம்மன் சயனநிலையில் அருள்பாலிக்கும் இந்த ஆலயத்தில் வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அமாவாசை வழிபாடு

இதனால் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை தினத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றையதினம் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள். பக்தர்கள் வசதிக்காக அன்று இரவு விடிய, விடிய கோவில் சன்னதி திறந்திருக்கும்.

இன்று வைகாசி மாத அமாவாசை தினம் என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அம்மனுக்கு 18 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. அதிகாலையே பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். கூட்டம் அதிகம் இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

கொடிமரம்

கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் பில்லி, சூனியம் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி நீதிகல்லில் மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பு கருதியும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான போலீசாரும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பொள்ளாச்சி, கோவையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

வனபத்ரகாளியம்மன் கோவில்

இதேபோல மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிலும் இன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com