புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-25)

புனித ரமனாலில் கடமையான ஜகாத்.வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை.
புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-25)
Published on

புனித ரமலானில் கடமையான ஜகாத்

இஸ்லாம் என்பது ஒரு மாளிகை போன்றது. அதற்கு ஐந்து தூண்கள் உண்டு. ஜகாத் என்பது மூன்றாவது தூண் ஆகும்.

1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,

2) தொழுகையை நிலை நிறுத்து தல்

3) ஜகாத் வழங்குதல்

4) ஹஜ் செய்தல்

5) ரமலானில் நோன்பு நோற்றல்

ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள் ளது என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பா ளர்: உமர் (ரலி), நூல்:புகாரி) திருக்குர்ஆனில் கிட்டத்தட்ட 82 இடங்களில் தொழுகையுடன் இணைத்து ஜகாத்தும் கூறப்பட்டிருக்கிறது.

'இது(வேதம்) நம்பிக்கையாளர்களுக்கு நேர் வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், ஜகாத்தையும் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் மறுமை மீது நம்பிக்கை. கொள்வார்கள்.' (திருக்குர்ஆன் 27:2,3)

'இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால். அவர்கள் ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள்.' (திருக்குர் ஆன் 23:4)

ஹிஜ்ரி 2- ஆம் ஆண்டு ரமலான் பிறை 28-ம் நாளன்று மதீனாவில் ஜகாத் முழுமையாகவும் விபரமாகவும் கடமையாக்கப்பட்டது. '(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக; நிச்சய மாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்) ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர் ஆன் 9:103)

ஜகாத்தின் மூலப்பொருட்கள் என்பது தங்கம், வெள்ளியாகும். 87½ கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருந்து, அவை ஓராண்டு முழுவதும் குறைவில்லாமல் இருந்தால், இவற்றில் நாற்பதில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும். இவ்விரண்டும் இல்லாதபட்சத்தில் கையில் பணம் மட்டுமே இருந்தால், 612 கிராம் வெள்ளி அளவுக்கு அந்த பணம் இருந்தால், அதில் இருந்து நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஜகாத் கொடுப்பவர் சொந்த வீடு, சொந்த வாகனம், சொந்த தொழில் நிறுவனம், தம் மீதுள்ள கடன் போக மீதமுள்ள பணம் அந்த அளவை அடைந்தால் மட்டுமே அவர் மீது ஜகாத் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர் களின் பட்டியலை திருக்குர்ஆன் பின்வரு மாறு கூறுகிறது. 'ஜகாத் எனும் நிதிகள்

1) வறியவர்கள்

2) ஏழைகள்

3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகையவர்கள்

5) அடிமைகள் விடுதலை செய்வ தற்கும்

6) கடனாளிகள்

7) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளவர்கள்

8) வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை

இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவையும்) அறிபவன். மிக்க ஞானமுடையவன்.' (திருக்குர் ஆன் 9:60)

ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலானில் ஜகாத் கடமையாக்கப்பட்டது. ரமலானில் ஜகாத் கொடுப்பது ஏற்றமானது; அதற்கு கூலி பன் மடங்கு வழங்கப்படும். ரமலான் அல்லாத மாதங்களிலும் தமக்கு வசதியான காலகட்டத்தில் ஜகாத் வழங்கலாம். மாறாக, ஒரு போதும் ஜகாத் வழங்காமல் மோசடி செய்து விடக்கூடாது. அவ்வாறு இருந்தால் உங்களது பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படாது. மாறாக அது அழிந்து போய்விடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com