குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: குடும்பத்துடன் விரதம் தொடங்கும் பக்தர்கள்

முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்.பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: குடும்பத்துடன் விரதம் தொடங்கும் பக்தர்கள்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் 2-வது இடமும் வகிக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி மகிசா சூரசம்காரம் நடக்கிறது.

இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 7 நாள், 11 நாள், 21 நாள், 31 மற்றும் 41 நாள் என கணக்கிட்டு விரதத்தை தொடங்கு வார்கள். முன்னதாக குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு வந்து, படிகம், பாசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை தேர்வு செய்து அதை வாங்கி கடலில் கழுவி, குளித்து விட்டு, கோவிலுக்கு வந்து வணங்கி, சிலர் கோவிலில் பூஜை செய்து பூசாரி கையினால் அல்லது தன்னைவிட வயது கூடுதல் உள்ள பெரியவர்கள் கையினால் மாலையை கழுத்தில் அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.

இதற்காக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பாசிமாலை கடைகள் உருவாகி உள்ளன. பக்தர்களும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்துவிட்டு பின்பு கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

திருவிழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com