திருவண்ணாமலையில் நாளை குபேர கிரிவலம்

கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன.கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேரன் அருணாசலேஸ்வரரை கிரிவலம் வருகிறார்.
திருவண்ணாமலையில் நாளை குபேர கிரிவலம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இந்த பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நாளை (திங்கள்கிழமை) குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் கிரிவலப்பாதையில் வேங்கிக்கால், அந்தியந்தல், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com