கருணையே சிறந்த வழிபாடு

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள்.ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய்.
கருணையே சிறந்த வழிபாடு
Published on

ஞானி ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமத்திலேயே பெரும் பணக்கார மனிதர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கஞ்சத்தனம் மிக்கவர். அவர் அந்த ஞானியிடம் வந்து,`நான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வழி சொல்லுங்கள் ஐயா' என்று கேட்டார்.`நீ, தினமும் ஏழை எளியவருக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய். கருணையே மிகச்சிறந்த இறை வழிபாடு' என்று பதில் சொன்னார் ஞானி.

பணக்காரர் ஞானியின் அறிவுரையைக் குறைந்தபட்சமாவது பின்பற்றலாம் என்று முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு யாசகனுக்கு ஒரு கைப்பிடி அரிசியை தானமாகக் கொடுத்தார். அதை பெருமையோடு அடுத்த நாள் ஞானியிடம் வந்து சொன்னார்.

அதைக்கேட்டதும் ஞானி, அருகில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடிப்பாகத்தை விரல் நகத்தால் கீற ஆரம்பித்தார். பணக்காரர் குழம்பிப் போய், அவரது செயலுக்கு காரணம் கேட்டார். `நான் நகத்தால் கீறி இந்த மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார் ஞானி.

பணக்காரருக்குச் சிரிப்பு வந்தது. `இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்ட முடியுமா?" என்று கேட்டார். `ஒரு பிடி அரிசியை யாசகனுக்கு கொடுத்து நீ வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்போது, இவ்வளவு பெரிய மரத்தை கை நகத்தால் வெட்டுவது பெரிய விஷயம் அல்ல" என்றார் ஞானி. பணக்காரருக்குத் தன் தவறு புரிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com