பகவதி அம்மன் கோவிலுக்கு `கியூ ஆர்' கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.`கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.
பகவதி அம்மன் கோவிலுக்கு `கியூ ஆர்' கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.

மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com