திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது
Published on

திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.

இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.

விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com