நரசிம்மரையே கட்டி வைத்த வேடனின் கதை பற்றி தெரியுமா?

அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்தவர் நரசிம்மர்.ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர்.
நரசிம்மரையே கட்டி வைத்த வேடனின் கதை பற்றி தெரியுமா?
Published on

அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது.

ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். இவர் கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருந்த போது, மறுகரையில் இருந்த ஆதிசங்கரர் உடனடியாக வரும் படி அழைத்தார். குருவின் மீது கொண்ட பக்தியால் எதை பற்றியும் யோசிக்காமல் கரைபுரண்டு ஓடும் கங்கை நீரில் இறங்கி நடக்க துவங்கி விட்டார்.

பிறகு தான் தெரிந்தது அவர் நீரின் மீது நடப்பதும், அதுவும் தாமரை மலர்கள் மீது கால் வைத்து நடந்து வந்ததும். குருவின் மீது இவர் கொண்ட பக்தியை பார்த்து நெகிழ்ந்து கங்கை தாயே தாமரை மலர்களை நீட்டி, அவரை தாங்கி பிடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு பத்மபாதமர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதிசங்கரரின் சீடனான பத்மபாதன், நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தன். அவருக்கு நரசிம்மரை நேரில் காண வேண்டும் என வெகு நாட்களாக ஆசை. இந்த ஆசை சில நாட்களில் வைராக்கியமாக மாறியது. இதனால் நரசிம்மரை நோக்கி கடும் தவம் புரிவதற்காக காட்டிற்கு சென்றார்.

அடர்ந்த காட்டில் வெகு நாட்களாக கண்களை மூடி, நரசிம்மரை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன், " யாரு சாமி நீ? பல நாட்களாக நான் உன்னை இங்கு பார்க்கிறேன். எதற்காக இங்கு வந்து கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாய்?" என கேட்டான்.

அவனுக்கு பதிலளித்த பத்மபாதன், "நான் நரசிம்மரை காண்பதற்காக தவம் செய்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே" என சொன்னார். " நரசிம்மமா? அப்படின்னா என்ன சாமி?" என அறியாமையுடன் கேட்டான் வேடன். "நரசிம்மம் என்றால் மனிதன் பாதி, மிருகம் பாதியான . அதை பற்றி சொன்னால் உனக்கு புரியாது" என சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் பத்மபாதன்.

ஆனால் வேடனோ, நீ சொல்வது போன்ற ஒரு மிருகத்தை இதுவரை நான் இந்த காட்டில் பார்த்தது கிடையாது. என்னவோ உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. உனக்காக இன்று பொழுது சாய்வதற்குள் அந்த மிருகம் எங்கிருந்தாலும் பிடித்து, கட்டி இழுத்து வருகிறேன்" என சொல்லி விட்டு காட்டிற்குள் சென்றான் வேடன். மான், முயல் என எத்தனையோ கண்ணில் பட்டும் அவற்றை பொருட்படுத்தாமல், நரசிம்மத்தின் மீது அவனது சிந்தனை இருந்தது.

பசி, தாகம் அத்தனையும் மறந்து காடு முழுவதும் தேடினான் கிடைக்கவில்லை. அந்தி சாயும் நேரமானது. தான் கொடுத்த வாக்குப்படி நரசிம்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என மனம் வருந்திய வேடன், இனியும் தான் உயிர் வாழ்வதில் அர்த்தம் கிடையாது என நினைத்தான்.

கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் வாழ்வதை விட சாவது மேல் என நினைத்த வேடன், ஒரு பெரிய பாறையின் மீது ஏறி உயிரை விட தயாரானான். அவனது அர்ப்பணிப்பு, கடமை உணர்வு கண்டு உருகிப் போன ஸ்ரீமன் நாராயணன், நரசிம்மமாக வேடனுக்கு காட்சி கொடுத்தார்.

தான் நாள் முழுவதும் தேடி அலைந்த நரசிம்மம் தன் முன் தோன்றியதை உண்டு உற்சாகமடைந்த வேடன், " மாட்டிக்கிட்டியா? உன்னை விடுவேனா பார்" என்று சொல்லி செடி, கொடிகளை வைத்து நரசிம்மரை கட்டி, பத்மபாதன் முன் அழைத்து வந்தான். பெரிய பெரிய வேதாந்திகளுக்கும், ரிஷிகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள், ஒரு வேடனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்றார்.

"சாமி, இதோ நீ கேட்ட நரசிம்மம்" என காட்டினான். பத்மபாதனின் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நின்ற செடி, கொடிகள் மட்டுமே சுற்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

இதனால், கோபமடைந்த பத்மபாதன், "அடேய் பைத்தியமே... என்னுடைய அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் செடி, கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாயே" என ஏளனமாக சிரித்தார். ஆனால் கட்டில் இருப்பது நரசிம்மம் என வேடன் என பலமுறை சொல்லியும் பத்மபாதன் கண்ணிற்கு தெரியவே இல்லை.

அப்போது ஒரு அசரீரி கேட்டது. "பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேடி அலைந்தான். என்னை காணாததால் உயிரை விடுவதற்கும் தயாரானான். ஆனால் நீயோ, அலைபாயும் மனதுடன், நான் வருவோனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவம் செய்தாய். உன்னிடம் ஆணவமும் உள்ளது. அப்படி இருக்கும் போது உன் கண்ணிற்கு நான் எப்படி தெரிவேன்?" என கூறி மறைந்து விட்டார் நரசிம்மர்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன் தனக்கு காட்சி அளிக்காமல் போனதற்கும், வேடனைப் போல் தனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாமல் போனதற்கும் வெட்கி தலைகுனிந்தார். வேடனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு, நம்பிக்கையும், முழு அர்ப்பணிப்புமே உண்மையான பக்தி என்பதை புரிந்து கொண்டார் பத்மபாதர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com