அயோத்தியில் இன்று கண் திறக்கும் பால ராமர்...

மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர்.ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்.
அயோத்தியில் இன்று கண் திறக்கும் பால ராமர்...
Published on

மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர். அவர் தனது ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

ராம ராஜ்ஜியம்

அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்த தசரதரின் மகனான ராமர், கடவுள் விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர் ஜனக மன்னரின் மகளான சீதாதேவியை மணமுடித்து அயோத்தியில் வசித்து வந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை, வாழ்வியல் முறையாக கடைபிடித்து வந்த ராமர், அயோத்தி அரசராக முடிசூடும் வேளையில் தந்தையின் கட்டளையால் வனவாசம் சென்றார்.

என் கணவர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி என்று ராமருடன், சீதா தேவியும் கானகம் புறப்பட்டார். அண்ணனுக்கு சேவகன் நானே என்று ராமரின் தம்பியான லட்சுமணனும் அவர்களுடன் புறப்பட்டார்.

கானகத்தில் தங்கி இருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில், இலங்கை வேந்தனான ராவணன், சீதா தேவியை இலங்கைக்கு கடத்தி சென்றான். அந்த ராவணனை இலங்கைக்கு சென்று வதம் செய்து, சீதாவை மீட்டு ராமேசுவரம் வருகிறார் ராமர்.

சிவனை வழிபாடு செய்த பின், ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் நல்லாட்சி செய்கிறார். அவரது ஆட்சியில் மக்கள் சீரும், சிறப்புடனும் வாழ்ந்தனர். இத்தகைய சிறப்புமிக்க ஆட்சியைதான் மக்கள் ராம ராஜ்ஜியம் என்று சொல்கின்றனர்.

ராம ஜென்ம பூமியில் கோவில்

கடவுள் ராமருக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அவரது பிறந்த பூமியான அயோத்தியில் ஒரு ராமர் கோவில் கூட இல்லை என்பதுதான் இந்துக்களின் ஏக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஏக்கத்தை போக்கும் விதமாக, அயோத்தியில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படும் இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவிலின் கருவறையில் வைக்கப்படும் சிலை மட்டும் சாதாரணமாக இருக்குமா என்ன?

ஆம்! அதுவும் சிறப்பு வாய்ந்ததுதான். இதற்காக மைசூருவில் சுமார் 300 கோடி ஆண்டு பழமை வாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதனை மைசூருவை சேர்ந்த சிற்பிஅருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

5 வயதுடைய பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலை, கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. சிலையில் கண்கள்  மட்டும் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது.

கண்களை திறக்கும் ராமர்

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேம் இன்று நடைபெற உள்ளது. ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com