அற்புதங்களை நிகழ்த்தும் `அய்யா வைகுண்டர்'

வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை “தவ வாசல்” என்றும் அழைப்பார்.திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு.
அற்புதங்களை  நிகழ்த்தும்  `அய்யா வைகுண்டர்'
Published on

அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் வடக்கு வாசல்....

தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். வந்ததும் அய்யாவை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார்.

சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார்.

அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த 2 ஆண்டுகள் தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.

மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன.

தலைமைபதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர்.

வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் அய்யா நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

இந்த திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிக மகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது.

" நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார்.

பக்தர்களின் வாழ்வில் மேன்மையும், புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்கு வாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்கு வாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com