கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத்தேர் பவனி

வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர்.கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.
இரு தங்கத்தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
இரு தங்கத்தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
Published on

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி போன்றவை நடந்தது.

காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி போன்றவை நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரைபாரதி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடந்தது. இரு தங்கத்தேர்களும் ரத வீதிகள் வழியாக பவனி வந்த போது வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com