திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
Published on

திருமலை:

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.

மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.

ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com