காரமடை அரங்கநாதருக்கு வைடூரியங்கள் பதிக்கப்பட்ட வெள்ளி சப்பரம்

காரமடை அரங்கநாதருக்கு வைடூரியங்கள் பதிக்கப்பட்ட வெள்ளி சப்பரம்

மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இநத கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாசிமக திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி காரமடை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அரங்கநாத சுவாமி பக்தர்கள் கொண்ட காரமடை ஸ்ரீ தாசப்பளஞ்சிகா மகாஜன சங்கம் சார்பில் 55 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான சப்பரம் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளி சப்பரத்தில் மரகத பச்சை கற்களில் சங்கு, மாணிக்க கற்களில் சக்கரம், சிகப்பு மற்றும் வெள்ளை பவளத்தில் திருநாமம் என விலையுயர்ந்த வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

கோவிலுக்கு வழங்கப்படும் தேக்குமரத்தில் வெள்ளியால் வேயப்பட்ட இந்த சப்பரத்தில் அரங்கநாத சுவாமி உருவபடத்தை வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியே உலா கொண்டு வரப்பட்டு கோவிலில் முறைப்படி ஒப்படை க்கப்பட்டது. பின்னர் கோவிலின் உள்ளே இந்த சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் பல வண்ண வாண வேடிக்கை நிகழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com