காளிதாசருக்கு, சரஸ்வதிதேவி கற்றுக்கொடுத்த பாடம்

ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர்.காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.
காளிதாசருக்கு, சரஸ்வதிதேவி கற்றுக்கொடுத்த பாடம்
Published on

ஒருநாள் காளிதாசர் வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். சிறிதுதூரம் சென்ற பிறகு காளிதாசருக்கு தாகம் எடுத்தது. அப்போது சிறிது தூரத்தில் கிணற்றில் இருந்து ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர். நேராக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் காளிதாசர். அந்த பெண்ணை பார்த்து காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.

கொஞ்சம் பருகுவதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். அந்த பெண்ணும் நான் உங்களுக்கு தண்ணீர் தருகிறேன். ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றாள்.

உடனே காளிதாசர் அந்த பெண்ணிடம் நான் ஒரு பயணி என்று சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் சந்திரன் மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு-பகல் என்று பயணிப்பவர்கள் என்று அந்த பெண் கூறினார்.

உடனே காளிதாசர் சரி... நான் ஒரு விருந்தாளி என்று வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இந்த உலகத்தில் இரண்டு விருந்தினர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று செல்வம், இன்னொன்று இளமை. இவர்கள் இரண்டுபேரும் தான் விருந்தினர்களாக வந்துவிட்டு உடனே சென்றுவிடுவார்கள்.

இந்த பதிலை கேட்டதும் காளிதாசருக்கு எரிச்சல் வந்தது. உடனே காளிதாசர் உனக்கு தெரியுமா பெண்ணே நான் மிகவும் பொறுமைசாளி என்று கூறினார். அந்த பெண் அந்த பொறுமைசாளியிலும் இரண்டு பேர்கள் மட்டும் தான் உள்ளனர். ஒன்று பூமி, இன்னொன்று மரம். எவர் மிதித்தாலும் தாங்குவது பூமி. யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்-கனிகளை கொடுப்பது மரம். இந்த இரண்டே பேர் தான் உலகத்தில் பொறுமைசாளிகள் என்று கூறினாள்.

இதைக்கேட்டதும் கோபம் அடைந்த காளிதாசர், நான் ஒரு பிடிவாதக்காரன் என்று அந்த பெண்ணிடம் கூறினார். அதற்கும் அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு பிடிவாதக்காரர்கள் தான் உள்ளனர். ஒன்று முடி, மற்றொன்று நகம். இந்த இரண்டும் எத்தனைமுறை வேண்டாம், வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.

இதை கேட்டுக்கொண்டெ இருந்த காளிதாசருக்கு தாகம் ரொம்ப அதிகரித்தது. உடனே கோபமுடனும், எரிச்சலுடனும் அந்த பெண்ணை பார்த்து உனக்கு தெரியுமா நான் ஒரு முட்டாள் என்று கூறினார் காளிதாசர். உடனே அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு முட்டாள்கள் தான் உள்ளனர். ஒருவர் இந்த நாட்டை ஆளும் அரசன். மற்றொருவர் அந்த அரசனுக்கு துதிபாடும் அமைச்சர் என்று கூறினாள்.

இதைக்கேட்டதும் காளிதாசருக்கு என்னசெய்வது என்று தெரியாமல் கையை கூப்பி வணங்கியதும். காளிதாசரை பார்த்து அந்த பெண் மகனே என்று சொன்னாள். அந்த குரல் கேட்டதும் காளிதாசர் எதுவும் புரியாமல் அவரை நிமிர்ந்து பார்த்தார். பார்த்ததும் மலைத்துபோய் நின்றார்.

சரஸ்வதி தேவி தான் அங்கு நின்றுகொண்டிருந்தார். சரஸ்வதிதேவியை பார்த்து காளிதாசர் கையைகூப்பு வணங்கினார். அதற்கு சரஸ்வதி தேவி காளிதாசா... எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ, அவனே மனிதப்பிறப்பின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு என்று கூறிவிட்டு தண்ணீர் குடத்தை காளிதார் கையில் கொடுத்துவிட்டு சரஸ்வதி தேவி மறைந்து சென்றாள்.

இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றாள் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மனிதனாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com