திருப்பதியில் 24-ந்தேதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு

ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் 24-ந்தேதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com