

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பகல்பத்து உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பகல்பத்து உற்சவம் நேற்று காலையில் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் சாமி வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் வருகிற 28-ந் தேதி வரை தினமும் காலையில் தேவநாதசுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடக்கிறது. வருகிற 29-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.