திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா

மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா
Published on

108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானதும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இருவராலும் பாடல் பெற்ற இடமான மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி மிக பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி திருவிழா நேற்று மாலை தொடங்கியது.

இதையொட்டி இன்று (30-ந்தேதி) காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. நாளை சிம்ம வாகனத்திலும், 1-ந்தேதி அனுமார் வாகனத்திலும், 2-ந்தேதி சேஷ வாகனத்திலும், 3-ந்தேதி கருட வாகனத்திலும் 4-ந்தேதி யானை வாகனத்திலும், 5-ந்தேதி வைரசப்பரத்திலும், 6-ந்தேதி குதிரை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

அதைத்தொடர்ந்து 7-ந்தேதி காலை 10 மணிக்கு தேரோட்டமும், இரவு 7 மணிக்கு சிவிகையில் தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 8-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம், இரவு 10 மணிக்கு புஷ்ப விமான நிகழ்ச்சியும் நடக்கின்றன.

மறுநாள் (9-ந்தேதி) அலங்கார மஞ்சன நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com