பாரத போரில் சக்கரத்தாழ்வார்

பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள். இது குறித்த ஆன்மிக கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பாரத போரில் சக்கரத்தாழ்வார்
Published on

ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலை நேரில் பார்க்க வேண்டும் என்று தவம் இருந்தார். இதை அறிந்த நாரதர், என்ன துர்வாசரே! எதற்காக திருமாலைப் பார்க்க இவ்வளவு கடுந்தவம் செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

உலகத்திற்குப் பேரழிவு வரும் என்று என் மனம் சொல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். அதை திருமாலால் மட்டுமே செய்ய இயலும். அதனால்தான் அவரைக் காண தவம் செய்கிறேன் என்றார்.

உடனே நாரதர், முனிவரே, திருப்பாற்கடலில் திருமால் ஓய்வில் உள்ளபோது இது போன்ற பணிகளை சுதர்சனரே செய்துவிடுவார் எனக் கூறி, சுதர்சனரை நினைத்து வேண்டினார். உடனே நாரதர்முன் தோன்றிய சுதர்சனர், என்ன நாரதரே! ஏன் என்னை நினைத்தீர்கள்? என்று வினவினார்.

நடந்ததை நாரதர் விளக்கமாகச் சொன்னார். துர்வாசரைப் பார்த்த சுதர்சனர், என்னை விட ஆற்றல் மிக்க இவரே அதைச் செய்யட்டுமே என்று துர்வாசரை இகழ்ந்து பேசினார். உடனே கோபம் கொண்ட துர்வாசர், முன்பு என்னைக் கொல்வதற்காக வந்தார். இப்பொழுது என்னை இகழ்ந்து பேசிவிட்டார். அதனால் பொன்னிறமான சுதர்சனர் கறுப்பாக மாறட்டும் என்று சாபமிட்டார்.

கோபம் கொண்ட சுதர்சனர் முனிவரைத் தாக்கச் சென்றார். உடனே திருமால் சுதர்சனரைத் தடுத்து நிறுத்தி, துர்வாசர் கொடுத்த சாபம் ஒருநாள் பலிக்கும் என்று கூறினார். அதுபோலவே பின்னாளில் நடந்தது.

பாரதப்போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை துரியோதனின் கூட்டத்தார் சூழ்ச்சி செய்து பத்ம வியூகத்தில் சிக்க வைக்க அவனை ஜெயத்ரதன் கொன்றான். இந்தச் செய்தியைக் கேட்ட அர்ஜுனன் கதறி அழுது, நாளை சூரியன் மறைவதற்குள்ளாக ஜெயத்ரதனைக் கொன்றுவிடுவேன். இல்லையென்றால் நானே தீயில் இறங்கி உயிரை விடுவேன் என்று கண்ணன் முன் சபதம் செய்தான்.

மறுநாள் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் ஜெயத்ரதனைத் தேடினான். அவன் எங்கும் காணாமல் போக, மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்த அர்ஜுனன், தீயில் இறங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான்.

அப்போது அர்ஜுனனின் தேரில் சாரதியாக இருந்த கண்ணன் தனது சக்கராயுதத்தை எடுத்து சூரியனை நோக்கி எறிந்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை மறைத்து பிரபஞ்சத்தை இருளடையச் செய்தது. இருள் சூழ்ந்ததைப் பார்த்த ஜெயத்ரதன் வெளியில் வந்து, அர்ஜுனன் இறந்துவிடுவான் என்று மகிழ்ச்சியில் இருந்தான்.

கிருஷ்ணர் இதைப் பார்த்து தனது சக்ராயுதத்தை திரும்புமாறு கூறினார். சூரியன் தன் கதிர்களை பிரபஞ்சத்தின்மீது பரவவிட்டான். உடனே கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, இதோ ஜெயத்ரதன் அவன்மீது அம்பை எறி என்று கூறினார்.

அர்ஜுனன் அம்பை எய்தவுடன் தலை தனியாகி அவன் தந்தை மடியில் விழுந்து, ஏற்கெனவே உள்ள சாபத்தின்படி இருவரும் தலை வெடித்து இறந்தார்கள். பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com