search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பெண்கள்- மந்திரம் ஓதிய பா.ஜ.க. அமைச்சர்
    X

    சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட பெண்களிடம் பூஜை தட்டை வானத்தில் காட்டி மந்திரம் ஓதிய பா.ஜ.க. அமைச்சர்.

    சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பெண்கள்- மந்திரம் ஓதிய பா.ஜ.க. அமைச்சர்

    • பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
    • பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.

    மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.

    இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×