கிருஷ்ணா கால்வாயில் இளைஞர்கள் ஆபத்தான குளியல்- 5 ஆண்டில் 15 பேர் பலி

கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணா கால்வாயில் இளைஞர்கள் ஆபத்தான குளியல்- 5 ஆண்டில் 15 பேர் பலி
Published on

ஊத்துக்கோட்டை:

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நநி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நெடுகிலும் 41 கிராமங்கள் உள்ளன.

தற்போது கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

சுமார் 15 அடி ஆழம் கொண்ட கால்வாயில் தண்ணீர் கரை புறண்டு ஓடுவதால் அவர்கள் நீரில் அடித்து செல்லபட்டு இறந்து போகும் அபாயம் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஊத்துக்கோட்டை, அம்பேத் கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், மெய்யூர், தேவந்தவாக்கம் பகுதிகளை சேர்ந்த 15 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடும் போது கால்வாயை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

இதில் அங்கம் வகிப்போர் கால்வாய் நெடுகிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கால்வாயில் யாராவது குளித்தாலோ அல்லது துணி துவைத்தால் எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

ஆனால் இவர்கள் சரியாக கண்காணிப்பில் ஈடுபடு வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது போன்ற உயிர் பலி சம்பவங்களை தடுக்க கால்வாய் நெடுகிலும் இருபுறங்களில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 5 அடி உயரத்துக்கு மதில் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com