

இங்கிலாந்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:54 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மொத்தம் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெயிலானது லண்டனின் விக்டோரியா நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் நோக்கி சென்று கொண்டிருந்தது.
லூயிஸ் நகருக்கு வெளியே ரெயில் அதிவேகமாகச் சென்றபோது திடீரெனக் குலுங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் கவிழ்ந்தன.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட 11 பேரில் இருவருக்கு லேசான காயங்களும், 2 பேருக்கு பலத்த காயமும், 9 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்குள் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, லூயிஸ் மற்றும் ஈஸ்ட்போர்ன் உள்ளிட்ட முக்கியப் பாதைகளில் இயக்கப்படும் ரெயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்துக்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்து போக்குவரத்துத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.