75 நாடுகளுக்கு விசா வழங்க தடைவிதித்த ட்ரம்ப் நிர்வாக உத்தரவு ரத்து... அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி!

விசா வழங்கினால் அமெரிக்காவிற்கு அவர்கள் பொதுச்சுமையாக மாறுவார்கள் என ட்ரம்ப் நிர்வாகம் வாதம்.
75 நாடுகளுக்கு விசா வழங்க தடைவிதித்த ட்ரம்ப் உத்தரவு ரத்து... அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி!
Published on

ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜேனட் வர்காஸ்.

இக்கொள்கை சட்டத்திற்கு முரணானது எனக்கூறி வெள்ளிக்கிழமை (ஆக.21) அன்று ரத்து செய்து உத்தரவிட்டார்.

“சட்டப்பூர்வமாக எந்தவொரு அடிப்படையும் இல்லாதபோது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விசாக்களை மறுக்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறும்” கொள்கையை வெளியிட்டு, வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தனது அதிகார வரம்பை மீறியுள்ளார்,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

தூதரக அதிகாரிகளுக்கே அதிகாரம்

சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மற்றும் விரிவான அளவுகோல்களை மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில், ஒரு குடியேறி விசாவுக்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் பிரத்யேக அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு குடியேற்ற உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து, 11 பேர் தாக்கல் செய்த மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசா தடைக் கொள்கை

இந்த விசா தடை கொள்கை கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது. ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட உலகளவில் சுமார் 75 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. இது உலக நாடுகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு ஆகும்.

இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறுபவர்கள், அங்குள்ள அரசு நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி “அந்நாட்டிற்கு பொதுச்சுமையாக” மாற அதிக வாய்ப்புள்ளது என்று டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com