

வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்நாட்டின் வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டக்சன் பகுதியில் பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு மருத்துவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இந்த துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தை பெரிய அளவிலான தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விவரங்களை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பதாக போலீசார் கூறினர். இதனால் துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது, இதில் ஈடுபட்டவர்கள் யார், உயிரிழப்பு உள்ளதா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.