

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அந்நாட்டிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக இலங்கை அறிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுடன் இலங்கை கொண்டுள்ள ஒற்றுமை உணர்வை இந்த உதவி வெளிப்படுத்துவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உருவான இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, புதன்கிழமையன்று மத்திய நேபாளத்தின் வழியாக பாய்ந்து பல நகரங்கள் மற்றும் கிராமங்களை சேதப்படுத்தியது. முக்கிய பாலங்களை அடித்து சென்றதுடன், ஒரு டசனுக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்களையும் முடக்கியது; மேலும் பல மாவட்டங்களையும் பாதித்தது.
நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு பணித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
"தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று கூறிய அந்த அறிக்கை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கே இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.