

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, உக்ரைன் போருக்கு எதிராக குரல் எழுப்பிய முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.
2022 பிப்ரவரியில் ரஷ்யா தனது அண்டை நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை பேரில் போரை தொடங்கியதில் இருந்து, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்காக ரஷ்யா எடுத்துவரும் மற்றுமொரு நடவடிக்கையாக, யப்லோகோ கட்சியின் மூத்த உறுப்பினரான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு எதிரான தீர்ப்பு அமைந்துள்ளது. போரை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி யப்லோகோ ஆகும்.
திங்களன்று வழங்கப்பட்ட தனித் தீர்ப்பில், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 18-20 தேதிகளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் யப்லோகோ கட்சியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தடைசெய்த தனது முந்தைய முடிவை உறுதிசெய்ததுடன், அக்கட்சியின் மேல்முறையீட்டையும் நிராகரித்தது.
தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போர் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் கிரெம்ளின் சகித்துக்கொள்ளாது என்பதை, ஷ்லோஸ்பெர்க் மற்றும் யாப்லோகோவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
63 வயதான ஷ்லோஸ்பெர்க், யப்லோகோவின் துணைத் தலைவர் ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை பிஸ்கோவ் பிராந்திய சட்டமன்றத்தில் பணியாற்றினார்.
மாஸ்கோவில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஸ்கோவ் நகரில், ரஷ்ய இராணுவத்தை பற்றி "அவமதிப்பு" விளைவித்ததாகவும் மற்றும் "பொய் தகவல்களை" பரப்பியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது.
போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த விவாதத்தில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படத்திற்கு அருகில் இரத்தம் தோய்ந்த பெண்ணின் படத்தை கொண்ட ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையின் முதல் பக்கத்தை, "அவள் இரத்தம்... அவன் கைகள்" என்ற தலைப்புடன் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டதில் இருந்தும் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஷ்லோஸ்பெர்க் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.