நள்ளிரவில் தாக்கிய பாகிஸ்தான்.. தூக்கத்திலேயே 11 குழந்தைகள் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

14 பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Published on

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் நள்ளிரவில் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 11 குழைந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

போர் நிறுத்தத்தை மீறி

தாலிபான்கள் தங்கள் நாட்டுக்குள் இயங்கி வரும் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு உதவுவதாக கூறி பாகிஸ்தான் அவ்வப்போது அந்நாட்டின் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சியில் கடந்த மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

நள்ளிரவில் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் பதிவில்,

"பாகிஸ்தான் வான்படை விமானங்கள் ஆப்கானிஸ்தானின் வான் எல்லையை அத்துமீறித் தாண்டி, எல்லையோர மாகாணங்களான குனார், கோஸ்ட் மற்றும் பக்திகா ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நள்ளிரவில் குண்டுகளை வீசின.

மக்கள் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களால் தப்பி ஓட முடியாமல் போனது.

இந்த கோரத் தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் முதியவர் ஒருவர் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும், 14 பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர்.' என தெரிவித்துள்ளார்

ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தாரர், பொதுமக்களை கொன்றதாக கூறும் தலிபான் அரசின் குற்றச்சாட்டுகளை பொய்யான பிரச்சாரம் என்று சாடியுள்ளார்.

பாகிஸ்தானில் 6 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொடூரமாகக் கொன்ற தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவிற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com