

சீனா சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு துணை அதிபரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
இதற்கிடையே, எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா- சீனா இடையிலான 25-வது சுற்று பேச்சுவார்த்தை சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ ஆகியோர் பங்கேற்றனர். அருணாச்சல பிரதேசம், லடாக் உள்பட இரு நாட்டு எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சீன வெளியுறவு மந்திரியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இருதரப்பு பொருளாதார, அரசியல் உறவை வலுப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங்கில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார் என தகவல் வெளியாகியது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின், 7 ஆண்டுக்குப் பிறகு சீன அதிபர் மீண்டும் இந்தியா வருகிறார். இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.