

வட கொரியா அச்சுறுத்திய சில நாட்களுக்கு பிறகு, கடலை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தனது அணுசக்தி தடுப்பு திறன்களை வலுப்படுத்துவதாகவும், அமெரிக்காவின் விரோத போக்குகளுக்கு பதிலடி கொடுப்பதாகவும் அறிவித்த நிலையில், வட கொரியாவன் ஏவுகணை சோதனை நடைபெற்றது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் ராஜதந்திர உறவுகளை புதுப்பிக்கும் வெளிப்படையான முயற்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் தென் கொரியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை குறைத்த பின்னரும் கூட, வட கொரியா நடத்தி வரும் தொடர்ச்சியான ஆயுத சோதனைகளின் சமீபத்திய நிகழ்வுகளே இந்த ஏவுகணை சோதனைகள் ஆகும்.
சுமார் மூன்று மணி நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த இரண்டு ஏவுகணை சோதனைகளும், வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான வொன்சான் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. முதல் ஏவுகணை சுமார் 450 கிலோமீட்டர் தூரமும், இரண்டாவது ஏவுகணை 600 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமும், இரண்டும் வட கொரியாவின் கிழக்கு கடற்பரப்பை நோக்கி பறந்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
ஏவுகணைகள் இறுதியில் கடலில் விழுந்தன. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களால் தடைசெய்யப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு வட கொரியாவை தென் கொரிய அதிபர் அலுவலகம் வலியுறுத்தியது.
அமெரிக்காவுடனான உறுதியான கூட்டணியின் கீழ், வடக்கின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் முறியடிக்க தயாராக இருப்பதாக தென் கொரிய ராணுவம் கூறியது.
முன்னதாக, வட கொரியாவின் சந்தேகத்திற்கிடமான ஏவுகணை ஒன்றை கண்டறிந்ததாகவும், ஆனால் அந்த ஆயுதம் தங்களது கடல் எல்லைக்குள் விழவில்லை என்றும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிம்மின் சகோதரியும் மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜோங், பயிற்சியின் நேரத்தை குறைப்பதால் அதன் "தூண்டுதல் மற்றும் ஆக்கிரமிப்பு தன்மை" மாறாது என்று கூறி, டிரம்ப்-இன் அணுகுமுறையை புறக்கணித்தார்.
அமெரிக்க-தென்கொரிய பயிற்சிக்கு பதிலடி கொடுப்போம் என்ற தனது முந்தைய அச்சுறுத்தலை நிறைவேற்றும் விதமாக, வடகொரிய ராணுவம் பின்னர் கடலை நோக்கி சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.