ஏவுகணையை வீசிய வடகொரியா - கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Ballistic Missile Test
Published on
Summary

கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா தனது நேரடி உபகரணப் பயிற்சிகளைப் மேற்கொண்டதுடன், பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இலக்குகளை தாக்கியது

வட கொரியா தலைநகர் பியோங்யாங் அருகே உள்ள கிழக்குக் கடல் பகுதியை நோக்கிய திசையில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை வான்வெளியில் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

நேரடி போர் பயிற்சி

இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு முன்பாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நாட்டின் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் நேரடிப் போர் பயிற்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இதில் அதிநவீன பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இலக்குகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன.

இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் “எங்களது தற்காப்பு ஆற்றலையும் எதிரிகளைத் தாக்கும் தயார்நிலையையும் நிரூபிக்கவே இந்த நேரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன” என்று கூறப்படுகிறது.

கண்டனம்

அதேநேரத்தில், வட கொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணை வீச்சுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் எல்லைப் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஜப்பான் தனது கடற்படை மற்றும் வான்படைப் பிரிவுகளை உஷார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com