மூளை வளர்ச்சி குன்றிய மகனுக்காக கையில் கீபோர்டு வடிவத்தை பச்சைக்குத்திய தாய்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக, தனது கையில் தாய் ஒருவர் கீபோர்டு வடிவத்தை பச்சைக்குத்தி கொண்டார்.
Autism mother’s keyboard tattoo
Published on

கனடாவில் மூளை வளர்ச்சி குன்றிய (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார்.

இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார்.

வேலைசெய்யாமல் போன மின்சாதனம்

கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.

அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான்.

இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார்.

பச்சை குத்திக்கொண்ட தாய்

இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.

இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான்.

இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.

இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார்.

மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com