பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்த மாலத்தீவு

கடந்த 5 ஆண்டுகளில் அதற்காக ஆன வட்டித் தொகையை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது.
மோடி - முய்சு
மோடி - முய்சு
Published on
Summary

இந்தியாவிடம் பெற்ற 150 மில்லியன் டாலர் கடனை மாலத்தீவு அடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியிலும், இந்தியாவிடமிருந்து பெற்ற 150 மில்லியன் டாலர் (1,436 கோடி ரூபாய்) கடனை மாலத்தீவு முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது.

ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை அடைந்த நிலையில் இறுதித் தவணையான 50 மில்லியன் டாலரை மாலத்தீவு அரசு செப்டம்பர் 17 அன்று செலுத்தி இந்தக் கடனை முழுமையாக அடைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

கடன்

2019 ஆம் ஆண்டு எஸ்பிஐ வங்கி மாலத்தீவில் கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் 150 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டது. இக்கடன் செலுத்தும் கெடு மொத்தம் 6 முறை நீட்டிக்கப்பட்டது.

இக்கடனின் அசலை தற்போது மாலத்தீவு அரசு செலுத்தியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காக ஆன வட்டித் தொகையை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியா செலுத்திய வட்டித் தொகை மட்டும் சுமார் 45 மில்லியன் டாலர் ஆகும்.

கூடுதல் நிதியுதவி

மாலத்தீவின் நிதி அமைப்பைச் சீரமைக்க இந்தியா ரூ.3,000 கோடிமதிப்பிலான கரன்சி ஸ்வாப் வசதியை வழங்கியுள்ளது.

இது தவிர, 2029 மற்றும் 2030 வரை செல்லுபடியாகும் வகையில் மலாத்தீவின் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான கருவூலப் பத்திரங்களையும் எஸ்பிஐ வங்கி வாங்கியுள்ளது.

மாலத்தீவிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் இந்தியா தொடர்ந்து விநியோகித்து வருகிறது.

மாலத்தீவின் அந்நியச் செலாவணி

இந்த 50 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 மில்லியன் டாலருக்கும் கீழே சரியும் சூழல் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் மாலத்தீவு பணவியல் ஆணையத்தின் தரவுப்படி, அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 643.8 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த அந்நியச் செலாவணி மற்றும் சுற்றுலாத் துறையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் பொருளாதார அமைப்பு காரணமாக மாலத்தீவு பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்தியா மாலத்தீவு உறவு

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியபோது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், அக்டோபர் 2024இல் அதிபர் முய்சு இந்தியாவிற்கு வருகை தந்தபோது, மாலத்தீவின் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க ரூ.6,300 கோடிக்கும் அதிகமான உதவிகளை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் மீண்டும் சீரடைந்து வலுப்பெற்று வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com