1972-ல் மாறிய விதி: 20 லட்சம் பறவைகளின் புகலிடமாக மாறிய அட்லாண்டிக் பெருங்கடலின் 'நியூ ஐலாண்ட்' தீவு!

இது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
Penguin Sanctuary
Published on
Summary

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தொலைதூரத் தீவை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் விலைக்கு வாங்கி, அதனை உலகின் மிக முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயமாக மாற்றியுள்ளார் என்ற ஆச்சரியமூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'நியூ ஐலாண்ட்' என்று அழைக்கப்படும் ஃபாக்லாந்து தீவுகளின் ஒரு பகுதியான இந்தத் தீவு, இன்று 5 வகையான பெங்குவின்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் அதிகமான கடல் பறவை ஜோடிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது.

பேராசையில் அழிந்த வரலாறு

ஒரு காலத்தில் இந்தத் தீவு மனிதர்களால் மிகவும் மோசமாக சுரண்டப்பட்டது. திமிங்கல வேட்டை முகாம்கள், பெங்குயின்களைக் கொன்று அவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் கொடூரங்கள் இங்கு அரங்கேறின.

அதுமட்டுமின்றி, ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளும், எலிகள், பூனைகள் மற்றும் முயல்கள் போன்ற ஆக்கிரமிப்பு உயிரினங்களும் மனிதர்களால் இங்கு இறக்கப்பட்டன.

இதனால் நிலத்தின் வளம் உறிஞ்சப்பட்டு, உள்ளூர் தாவரங்களும், பறவைகளும் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

1972-இல் ஏற்பட்ட திருப்புமுனை

கடந்த 1972-ஆம் ஆண்டு, வனவிலங்கு ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான இயன் ஸ்ட்ரேஞ்ச் என்பவர், ரோடி நேப்பியர் என்பவருடன் இணைந்து இந்தத் தீவை விலைக்கு வாங்கினார்.

அவர்கள் வழக்கமான வணிக நோக்கங்களை விடுத்து, இயற்கை அன்னைக்கு ஒரு மறுவாய்ப்பு கொடுக்க முடிவு செய்தனர்.

'நியூ ஐலாண்ட் டிரஸ்ட்' என்ற அமைப்பைத் தொடங்கி, ஆடு, மாடு மேய்ப்பதை முழுமையாக நிறுத்தினர். வணிகப் பயன்பாட்டைத் தவிர்த்து, ஆராய்ச்சி மற்றும் சூழலியல் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

இதன் விளைவாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு நிலம் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கி, பூர்வீக தாவரங்களும், பறவைகளும் தீவிற்குத் திரும்பின.

20 லட்சம் பறவைகள் மற்றும் 5 வகை பெங்குயின்கள்

வெறும் 13 கிலோமீட்டர் நீளம் மட்டுமே கொண்ட இந்த சிறிய தீவில் தற்போதைய பறவைகளின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது.

கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ஜோடி மெல்லிய-அலகு பிரியான்கள் கடல் பறவைகள் இங்கு வசித்து வருகின்றன. இவை மண்ணில் துளையிட்டு வாழும் மர்மமான பறவைகளாகும்.

ஜென்டூ (Gentoo), தெற்கு ராக்ஹாப்பர் (Southern Rockhopper), மெகல்லானிக் (Magellanic), மேக்ரோனி (Macaroni) மற்றும் எப்போதாவது தென்படும் கிங் பெங்குவின் (King penguin) என ஐந்து அபூர்வ பெங்குயின் வகைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

கருப்பு புருவ அல்பட்ரோஸ்கள், இம்பீரியல் ஷாக்ஸ் மற்றும் வெள்ளை நிற பெட்ரல்கள் என மொத்தம் 39 வகையான இனப்பெருக்கப் பறவைகள் இங்கு வாழ்வதாக ஃபாக்லாந்து சுற்றுலா வாரியம் கணக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக இது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

சவால்களும் தற்போதைய நிலையும்

இயற்கை மீண்டெழுந்தாலும், மனிதர்களால் கொண்டு வரப்பட்ட எலிகள், பூனைகள் போன்றவற்றை முழுமையாக ஒழிப்பது இன்னும் சாத்தியப்படவில்லை. எனினும், விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பால் அவை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று இந்தத் தீவில் எந்தவொரு தார் சாலையோ, பரிசுப் பொருட்களோ வாங்கும் கடைகளோ இன்றி, இயற்கையின் தூய்மையான வடிவமாகவே பாதுகாக்கப்படுகிறது.

1972-இல் இயன் ஸ்ட்ரேஞ்ச் எடுத்த ஒரு மாற்று முடிவு, 50 ஆண்டுகள் கழித்து இன்று லட்சக்கணக்கான கடல் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com