ரஷியாவில் பாலம் இடிந்து விழுந்ததால் ரெயில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவில் பாலம் இடிந்து விழுந்ததால் ரெயில் கவிழ்ந்து விபத்து -  7 பேர் உயிரிழப்பு
Published on

ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள கிளி மோவ் நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்ஷினோ, வைகோனிச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அங்கிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கவிழ்ந்த ரெயில் பெட்டி யில் இருந்த பயணிகளை மீட்டனர். ரெயில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 7 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சதி செயல் காரணம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. மேம்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் நடந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச் செயல் இருக்கலாம் என்று ரஷிய அதிகாரிகள் சந்தே கத்தை எழுப்பியுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com