

சுற்றுலா சென்று திரும்பும்போது புகைப்படங்கள், நினைவுப் பொருட்கள் என பலவற்றை வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஆனால், நாம் உருவாக்கும் கழிவுகளை முறையாக அகற்றுவது பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இதன் விளைவாக பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரைகள் மற்றும் காடுகளில் நீண்ட காலம் தேங்குகின்றன.
பிரேசிலின் இட்டமராக்கா தீவில், எட்னா டான்டாஸ் மற்றும் அவரது மகள் மரியா கேப்ரெய்லி டான்டாஸ் இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வை கண்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு அவர்கள் கடற்கரையில் குவிந்து கிடந்த கண்ணாடிப் பாட்டில்களை சேகரிக்கத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் உழைத்து, மரப்பொருட்கள், பழைய மரப் பலகைகள், பற்பசைக் குழாய்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுடன் ஒரு வீட்டை உருவாக்கினர்.
‘Casa de Sal’ அல்லது ‘சால்ட் ஹவுஸ்’ என அழைக்கப்படும் இந்த ஏழு அறைகள் கொண்ட வீட்டின் சுவர்களை பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 கண்ணாடிப் பாட்டில்கள் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். சூரிய உதயத்தின் போது பாட்டில்கள் வழியாக ஒளி வீட்டுக்குள் ஊடுருவுவதால், அதன் சுவர்கள் அழகாக ஒளிர்கின்றன.
எட்னா சமூக-சுற்றுச்சூழல் கல்வியாளராகவும், 27 வயதான மரியா நிலைத்தன்மை சார்ந்த ஆடைத் துறையிலும் பணியாற்றுகிறார். பெண்கள் கட்டுமானத் துறையில் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டையும் அவர்கள் இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது சால்ட் ஹவுஸ் தங்குமிடமாகவும், நிலைத்த கட்டுமான முறைகள் குறித்த பயிற்சிகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது. கழிவாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களும் படைப்பாற்றல், உழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் பயனுள்ள ஒன்றாக மாற முடியும் என்பதை இந்தத் தாய் மற்றும் மகள் ஆகியோர் நிரூபித்து உள்ளனர்.
இவர்களின் முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கண்ணாடிப் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அவை வீணாகக் குப்பைக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர். மேலும், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலம் புதிய பொருட்களின் தேவையையும் குறைக்க முடியும் என்பதை இந்த வீடு உணர்த்துகிறது.
தாய் மற்றும் மகளின் பல ஆண்டுகால முயற்சி, படைப்பாற்றலும் விடாமுயற்சியும் இருந்தால் கழிவுப் பொருட்களைக்கூட பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. அவர்களின் வீடு இன்று ஒரு தனித்துவமான இல்லமாக மட்டுமல்லாமல், நிலைத்தன்மை, மறுபயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.