இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவு அருகே, நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 211 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேரைத் தேடும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது.
'புத்ரி யாஸ்மின்' என்ற அந்தப் படகு, பாலியில் இருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
புதன்கிழமை அதிகாலை சுமார் 4:15 மணியளவில் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தபோது, படகில் திடீரென தீப்பிடித்தது. அந்தப் படகில் 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பயணித்துள்ளனர்.
மேலும், 44 வாகனங்களும் 53 மோட்டார் சைக்கிள்களும் அதில் ஏற்றிச் செல்லப்பட்டன.
படகு தீ பிடித்ததில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல், பல பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு கடலில் குதித்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், 13 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் பொருட்படுத்தாமல், ஹெலிகாப்டர் மற்றும் 6 கப்பல்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படகின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் 131 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், மீட்புக் குழுவினர் இதுவரை 211 பேரை மீட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் வழக்கமாகப் பட்டியலில் உள்ளதை விட அதிக மக்களைப் படகுகளில் ஏற்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த பெரும் குளறுபடி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் டுடி பூர்வகாந்தி தெரிவித்துள்ளார்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.