வளர்ச்சி அடையாத மண்டை ஓட்டுடன் பிறந்த குழந்தை - இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

இங்கிலாந்தில் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்த குழந்தைக்கு நைட்டினோல் சுருள் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
Doctors use nitinol coils to reshape underdeveloped baby skull
Published on
Summary

இங்கிலாந்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தலையின் மண்டை ஓடு முழுவதுமாக வளர்ச்சியடையாத நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மண்டை ஓட்டிற்குள் துருப்பிடிக்காத கம்பி சுருள்களை பொறுத்தி, எலும்புகளுக்கு இடையிலான இடைவெளிகளை அகலப்படுத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.

குறைபாட்டுடன் பிறந்த குழந்தை

இங்கிலாந்தில் டெர்பிஷையரை சேர்ந்த ரேரி பார்ட்டர் என்ற ஆண் குழந்தை பிறக்கும் போது சஜிடல் கிரானியோசினோஸ்டோசிஸ் (sagittal craniosynostosis) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளது.

இந்த வகையான குறைபாட்டின் மூலம், குழந்தையின் மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் பிறப்பதற்கு முன்பே ஒன்றிணைந்து மூளையின் இயல்பான விரிவாக்கத்தை தடுத்துள்ளது.

இந்த வகை குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு, வளர்ச்சி தாமதங்கள், பார்வை குறைபாடு, சுவாச கோளாறு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் காணப்படுகின்றன.

இந்த வகையான குறைபாடுகள் 2,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து அந்த குழந்தைக்கு கிரேட் ஓர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தைக்கு நிக்கல்-டைட்டானியம் கலப்பு உலோகமான நைட்டினோலில் இருந்து, உருவாக்கப்பட்ட துருப்பிடிக்காத சுருள்களை கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் மருத்துவர்கள் சி.டி-ஸ்கேன் மூலம் கிடைக்கப்பெற்ற முப்பரிமாண ஆய்வு மூலம், நைட்டினால் சுருளை துல்லியமான அளவில் பொருத்தினர்.

இந்த நெகிழித் தன்மையுள்ள சுருளானது, குழந்தை வளரும்போது நைட்டினால் உலோகம் இயற்கையாகவே தன்னை தகவமைத்து கொள்ள அனுமதிக்கிறது.

மருத்துவர்கள் சாதனை

சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்த தொழில்நுட்பம் அதிகளவிலான துல்லியத்தை அளித்து, சிகிச்சையின் கால அளவை 45 நிமடங்களில் குறைத்தது.

குழந்தைக்கு ரத்த மாற்றங்களின் தேவையை குறைத்து, எதிர்காலத்தில் கூடுதல் சீரமைப்பு நடைமுறைகளை தடுக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் மண்டை ஓடு, வெற்றிகரமாக அதன் இலக்கு நிலைக்கு விரிவடைந்ததும், அந்த சுருள் கம்பிகள் அகற்றப்பட்டும்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாயார் நெகிழ்ச்சி

இங்கிலாந்து மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை குறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், “அவன் மற்ற சிறுவர்களை போலவே வளர்ச்சி அடைந்து வருகிறான். மேலும் அவன் பெரியவன் ஆனதும், அவனைப் பற்றி சொல்வதற்கு ஒரு அருமையான கதை அவனிடம் இருக்கும்” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com