

இன ரீதியாக பிளவுபட்ட சைப்ரஸின் வடக்குப்பகுதியில், சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகு ஒன்று கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்குப் பகுதியின் துருக்கிய சைப்ரியட் பிரதமர் உனல் உஸ்டெல், துருக்கிய அரசு ஒலிபரப்பு நிறுவனமான டிஆர்டி (TRT)-யிடம் பேசும் போது, இதுவரை 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 22 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
மோசமான வானிலை நிலவியதாகவும், புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே படகிற்குள் நீர் புகத் தொடங்கியதாகவும் உஸ்டெல் கூறினார். அதன்பின் சிறிது நேரத்திலேயே உதவி கோரும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். படகு மூழ்கியது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, படகின் கேப்டன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக உஸ்டெல் கூறினார்.
வானிலை நிலைமை "மோசமாக இல்லை" என்று கூறிய துருக்கிய சைப்ரியட் தலைவர் டுஃபான் எர்ஹுர்மன், விபத்துக்கான காரணம் குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 500 மீட்டர் (1,640 அடி) ஆழமான நீரில் கப்பல் மூழ்கியதால் தேடுதல் பணிகள் சவாலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது இரங்கலை தெரிவித்ததுடன், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் வடக்கு சைப்ரஸ் உடன் தனது அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அங்காராவில் உள்ள துருக்கிய ராணுவ அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய எர்டோகன், "நாங்கள் நல்ல செய்தியை பெறுவோம் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
கேட்ரமரன் வகையைச் சேர்ந்த அந்த படகு, கைரேனியா (கிரினே என்றும் அழைக்கப்படுகிறது) துறைமுகத்தில் இருந்து மெர்சின் மாகாணத்தில் உள்ள துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இக்கப்பல் 'பிலோ டெனிஸ்சிலிக்' என்ற படகு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், சைப்ரஸின் வடக்கு கடற்கரையில் உள்ள டயானா கடற்கரைக்கு அப்பால் அது மூழ்கியதாகவும் கைரேனியா மேயர் முராத் சென்குல் தெரிவித்தார்.