பெங்களூருவில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு- குமாரசாமி

பெங்களூருவில் அடுத்த ஆண்டு(2020) உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அமெரிக்காவில் குமாரசாமி கூறினார்.
குமாரசாமி
குமாரசாமி
Published on

பெங்களூரு :

முதல்-மந்திரி குமாரசாமி ஒரு வார சுற்றுப்பயணமாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில் குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தொழில்துறையில் இந்தியாவில் கர்நாடகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. உலகில் திறன்மிகு நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் நிலையில், கர்நாடகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. குறித்த காலத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கும் நோக்கத்தில் அவற்றை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட அரசின் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் மற்றும் மின் சேகரிப்பு கொள்கையை சமீபத்தில் செயல்படுத்தினோம். நாட்டிலேயே இத்தகைய கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகம். புதிய தொழில் கொள்கை (2019-2024) உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 2-வது, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கும் வகையில் 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கர்நாடகம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது.

அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான வசதி வாய்ப்புகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com