

உத்தரப்பிரதேசம் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம். கணவனை இழந்த இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நீலம் வீட்டில் தனியாக இருக்கும் போது அவருடைய மைத்துனர் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது நீலம் அவரை தடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த அவர் நீலத்தை உயிருடன் எரித்துக் கொன்றார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீலத்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கற்பழிக்க முயன்றவரை தடுத்த பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெண்கள்- குழந்தைகள் நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தினர். அதன் முடிவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இம்மாநிலம் 0.43 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.