

பாட்னா:
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கோருல் கிராமத்தை சேர்ந்தவர் சியாமளி தேவி (60). இவருக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடந்தது. அதை தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை சியாமளி தேவி மாத்திரை போடுவதற்காக மருத்துவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
அவரும் அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் பாட்டில் என நினைத்து எடுத்து கொடுத்து விட்டார். சியாமளி தேவியும் அந்த பாட்டிலை வாங்கினார். வாயில் மாத்திரைகளை போட்டு மளமளவென குடித்து விட்டார்.
இதைத்தொடர்ந்து, அலறித் துடித்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சியாமளி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனையில் மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் கவனக்குறைவாக ஆசிட் தந்த மருத்துவமனை பணியாளரால், பெண் நோயாளி பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews