

அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த ஆதார் எண் கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தெரிவித்தது. பின்னர் பல்வேறு விவகாரங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்டது.
ஆதாருக்காக வழங்கப்படும் தகவல் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், 40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்கள் திருடியதாக மென்பொருள் வல்லுனர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ திருடி உள்ளதாக விக்கிலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கிராஸ் மேட்ச் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ் லேன் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில், சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆதார் தகவல்களை ரகசியமாக சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.