தேர்தல் தோல்வியால் கதறி அழுத பெண் வேட்பாளர்? வைரலாகும் புகைப்படம்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பார்லி தொகுதியில் கோபிநாத் முன்டேவின் மகள் பன்கஜா முன்டே தனது உறவினர் தனஞ்ஜெய் முன்டேவை எதிர்த்து போட்டியிட்டார். சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 24) வெளியானதைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியுற்ற பன்கஜா மனம் துவண்டு அழும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தேர்தல் தோல்வியால் பன்கஜா முன்டே அழுகிறார் என்றே வைரல் தகவலை பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி நிறுவனங்களும் உண்மையென நம்பி செய்தி வெளியிட்டன.
வைரலாகும் புகைப்படம் ஒன்றில், "மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி பன்கஜா முன்டே பார்லி தொகுதியில் தனது உறவினர் தனஞ்ஜெய் முன்டேவை விட 22,000 வாக்குகள் குறைவாக பெற்று தேர்தலில் தோல்வியடைந்ததால் அழுகிறார். இவருக்கு அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி என இருவரும் பிரசாரம் செய்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்கஜா முன்டே அழும் வைரல் புகைப்படம் உண்மையில் அக்டோபர் 20 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும். மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்திற்கு முன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பன்கஜா முன்டே பேட்டியளித்த போது தனது உறவினரின் கருத்துக்களை கூறி அவர் அழுதார். அந்த வகையில் பன்கஜா முன்டே தேர்தல் தோல்வியால் அழவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

