முசாபர்பூர் விடுதி பாலியல் வழக்கு - பீகார் முன்னாள் பெண் மந்திரிக்கு கைது வாரண்ட்

பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மாவை கைது செய்ய இன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome
முசாபர்பூர் விடுதி பாலியல் வழக்கு - பீகார் முன்னாள் பெண் மந்திரிக்கு கைது வாரண்ட்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 9-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா நேற்று (திங்கட்கிழமை) பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது. 

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 9-ம் தேதியே தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சு வர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com