ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆகிறது

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு சபை
ஐ.நா. பாதுகாப்பு சபை
Published on

அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில், 10 நாடுகள் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர்களாக இடம்பெறுகின்றன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் 5 இடங்களுக்கு உறுப்பு நாடுகளை தேர்ந்து எடுக்க ஆண்டுதோறும்தேர்தல்நடைபெறும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா ஏற்கனவே 7 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்று உள்ளது. கடைசியாக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உறுப்பினராக இருந்தது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான 5 தற்காலிக உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆசியா பசிபிக் பிராந்தியத்துக்கான ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிடுகிறது.

இந்த ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிட ஆசியா- பசிபிக் நாடுகள் குழுவில் உள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மனதாக ஆதரவு அளித்தன. எனவே இந்தியா தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த தேர்தலை வருகிற ஜூன் 17-ந் தேதி நடத்த, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்து இருந்தது. வழக்கமாக இந்த தேர்தல் ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும். 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டு 5 தற்காலிக உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com