விருத்தாசலம் அருகே பலத்த மழை- இடி தாக்கி பெண் பலி

விருத்தாசலம் அருகே பலத்த மழை- இடி தாக்கி பெண் பலி

விருத்தாசலம் அருகே இன்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

மங்கலம்பேட்டை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேகா (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் மனைவி கஸ்தூரி (30), பரமசிவம் (41) உள்பட 39 பேர் நூறுநாள் திட்டத்தில் எடைசித்தூர் எல்லையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதில் ரேகா, கஸ்தூரி மற்றும் பரமசிவம் ஆகியோரை இடி தாக்கியது. இதில் ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கஸ்தூரி, பரமசிவம் ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பலத்த காயம் அடைந்த கஸ்தூரி, பரமசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தமிழரசன் மங்கலம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com